world

img

மக்கள் நலத்திட்டங்களை முன்னிறுத்துவோம் :குஸ்தவோ பெட்ரோ உறுதி

ஓய்வூதியம், தொழிலாளர் துறை மற்றும் சுகாதாரச் சீர்திருத்தங்கள் உள்ளிட்டவற்றிற்கு முன்னுரிமை வழங்குவோம் என்று கொலம்பியாவின் ஜனாதிபதி குஸ்தவோ பெட்ரோ உறுதி அளித்துள்ளார்.

ஓய்வூதியத்திட்டத்தில் மாதத்திற்கு குறைந்தபட்சம் 110 அமெரிக்க டாலரை ஓய்வூதியமாக வழங்கும் ஆலோசனையை பெட்ரோ முன்வைத்திருக்கிறார். ஓய்வூதியம் தேவைப்படும் வயதானவர்களில் 30 லட்சம் பேருக்கு இந்த ஓய்வூதியம் தரப்படும். அதேபோன்று மருத்துவத்துறையில் மருத்துவமனைகளுக்கும், மக்களுக்கும் இடையிலான முகவர்களை நீக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவிருக்கிறார்கள்.

மருத்துவத்துறையில் செய்யப்படவுள்ள சீர்திருத்தங்களுக்கு தனியார் நிறுவனங்களும், அவர்களுக்குத் துணையாக நிற்கும் அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தனது சீர்திருத்தம் குறித்துப் பேசிய பெட்ரோ, "மக்களுக்கு நோய் வராமல் முடிந்த அளவுக்குத் தடுப்பதே நமது நோக்கமாகும். எளிதில் சென்றடையாத இடங்களில் இருக்கும் மக்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்துதல் அவசியமாகும். ஏழை விவசாயிகளுக்கு மருத்துவம் என்பது முக்கியமானதாக இருக்கிறது" என்று குறிப்பிட்டார்.

ஓய்வூதியத்திட்டம் பற்றிப் பேசிய அவர், "தற்போதுள்ள ஓய்வூதியத்திட்டம் வர்த்தகமயமாகியுள்ளது. பல ஆண்டுகள் சேமித்த பிறகும், தனது முதுமைக் காலத்திற்கான ஓய்வூதியத்தைக் கூடப் பெற முடியாத சூழல் இருக்கிறது" என்றார். அதேபோன்று, தொழிலாளர்களுக்கான சமூக நலத்திட்டங்கள், விடுமுறைக்காலம் மற்றும் முறையான வேலை நேரம் உள்ளிட்டவை குறித்த உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்படும். தொழிலாளர்களுக்கு நிலையான வேலை மற்றும் கவுரவத்தை இது தரும் என்று பெட்ரோ கருதுகிறார்.